தமிழ்நாடு

“பாக். வசமுள்ள வீரர் விரைவில் மீட்கப்படுவார்” - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

“பாக். வசமுள்ள வீரர் விரைவில் மீட்கப்படுவார்” - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

webteam

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை வீரர் விரைவில் மீட்கப்படுவார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நமது எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி தங்கள் வசம் பிடிபட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் இந்தியாவிடம் தெரிவிக்காமல் இருந்தது. 

இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிப் கஃபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிபட்ட வீரரின் படத்தை வெளியிட்டு இருந்தார். அதில், இந்திய விமானி கைகளில் டீ கப்புடன் இருப்பது போல் இருந்தது. கூடவே, ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ராணுவ நடைமுறைகளின் படி அவர் சரியா நடத்தப்பட்டு வருவதாகவும் அசிப் கஃபூர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானப்படை விமானியை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், “இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபினந்தன் வர்த்தமான் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் வசம் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களும் அவரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.