தமிழ்நாடு

சுதந்திர தினம்: ரூபிக் க்யூப் மூலம் இந்திய வரைபடத்தை உருவாக்கி சாதனை படைத்த 7 வயது சிறுமி

kaleelrahman

சுதந்திர தினத்திற்காக அம்பத்தூரை சேர்ந்த 7 வயது சிறுமி 955 ரூபிக் கியூப் மூலம், மூவர்ணத்தினாலான இந்திய வரைபடத்தை 8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் - ஜூலி தம்பதியினரின் மகள் கிறிஸ்டா ஜெசிகா (7). இவர், அண்ணாநகரில் உள்ள ஆச்சி குளோபல் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே நல்ல அறிவுத் திறனுடன் இருந்து வந்த கிறிஸ்டா ஜெசிகா கடந்த 2019 ஆம் ஆண்டு பாடியில் உள்ள தமிழ்நாடு கியூப் அசோசியேசனில் சேர்த்து, ரூபிக் கியூப் என்ற அறிவு சார்ந்த விளையாட்டை கற்றுக்கொள்ள அவருடைய பெற்றோர் வழிவகை செய்தனர்.

இந்நிலையில், அங்கு கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் ஜெசிகா தனது புத்திக்கூர்மையால் ரூபிக் க்யூப்-களை வைத்து சாதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இன்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 955 ரூபிக் கியூப்-களைக் கொண்டு 8 மணி நேரத்தில் 6.5 அடி உயரமும், 5.5 அடி அகலமும் கொண்ட, மூவர்ணங்களால் ஆன இந்திய வரைபடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.