தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு: உபரி நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு

webteam

மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2177 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மாண்டஸ் புயல் தாக்கத்தின் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.04/24 அடியாகவும், நீர் வரத்து நேற்று 730 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 2177 கன அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2864 மில்லியன் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 100 கன அடியாக உள்ளது.

இதையடுத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 23 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.