தமிழ்நாடு

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2-ஆவது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு

Rasus

வரி ஏய்ப்பு புகாரையடுத்து கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் 2-ஆவது நாளாக வருமான வரிச் சோதனை நீடிக்கிறது.

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டுவரும் கிறிஸ்தவ மதபோதகர் பால்தினகரன் வெளிநாடுகளிலிருந்து விதிகளை மீறி நிதி பெறுவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து சென்னை அடையாறில் உள்ள பால் தினகரனின் வீடு, இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமையகம், ஜெபக்கூடங்கள் உள்ளிட்ட மொத்தம் 28 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.

3 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பால் தினகரனுக்கு சொந்தமான கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சோதனை முடிவடைந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.