தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணியின் நண்பரின் இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை

ஜா. ஜாக்சன் சிங்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருங்கிய நண்பராகவும், கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆகவும் இருப்பவர் சந்திரசேகர். இவரது வீட்டில் கடந்த 6-ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சந்திரசேகரின் வீடு, அவரது தந்தை, தம்பி செந்தில் பிரபு ஆகியோரின் வீடுகள், பீளமேடு பகுதியில் உள்ள கேசிபி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கேசிபி நிறுவனம் மற்றும் சந்திரசேகர் தொடர்புடைய ஆலயம் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் விசாரணை தொடர்ந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில், 6-வது நாளான இன்றும் சந்திரசேகரனின் தம்பி செந்தில் பிரபு வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர்.