தமிழ்நாடு

சபரிமலை மண்டல பூஜைக்கால வருமானம்: கடந்த ஆண்டை விட எவ்வளவு குறைவு தெரியுமா?

webteam

கொரோனா பரவல் காரணமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலத்தில் ஒன்பது கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தலைவர் தெரிவித்தார். 


இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தலைவர் என்.வாசு கூறும்போது, “ சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நவம்பர் 15 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 24 ஆம் தேதி வரையிலான 39 நாட்களில், கொரோனா விதிமுறைகளுடன் 71,706 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் வழியாக காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் ஒன்பது கோடியே 9 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மண்டல பூஜை காலத்தில் மட்டும் 156 கோடியே 60 லட்சம் வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்துள்ளது. 96 பக்தர்கள், 289 சுகாதார ஊழியர்கள், போலீசார், தேவஸ்வம்போர்டு பணியாளர் என மொத்தம் 390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது” என்றார்.