தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

jagadeesh

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரனஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும் அனல் காற்று காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வேட்பாளர்களை பரப்புரையை தவிற்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தின் 20 மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், வேலூர் மற்றும் திருத்தணியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். அதற்கு அடுத்தபடியாக திருச்சி மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,

சேலம் மற்றும் கரூர் பரமத்தியில் 104 ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல்லில் 102, நுங்கம்பாக்கம், மதுரை, புதுச்சேரியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மேலும் சில தினங்கள் வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.