தமிழ்நாடு

காதலனை தேடி வீட்டை விட்டு வெளியேறிய காதலி?- இளைஞர் வீட்டை சூறையாடிய பெண்ணின் உறவினர்கள்

JustinDurai

வாணியம்பாடியில் காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்த காதலனின் வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த சிவனாண்டி - விஜயா தம்பதியினரின் மகள் பாரதியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்ய ஊரை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து பெண்ணின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில், மகளுக்கு 18 வயது பூர்த்தியாகாததால், விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பாரதிக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது. இதையடுத்து பாரதி, காதலர் விக்னேஷை தேடி ஊரிலிருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் உறவினர்கள் விக்னேஷ் வீட்டுக்கு சென்று வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வீட்டை அடித்து சூறையாடி உள்ளனர்.

இதுகுறித்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் விக்னேஷின் தாய் மல்லிகா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியின் உறவினர்களை தேடி வருகின்றனர்.