தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 36% பேர் சென்னைவாசிகள்!

JustinDurai

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 36 சதவிகிதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 நபர்களைச் சேர்த்து மொத்தம் 6,671 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,105 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 நபர்களுக்கும், கோவை மாவட்டத்தில் 604 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,308 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36% பேர் அதாவது 17,098 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் 2,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,80,910 ஆக உள்ளது. ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,927ஆக உயர்ந்துள்ளது.