தமிழ்நாடு

அரசு ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம்: சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை

JustinDurai
கோவையில் அரசு ஊழியரை சாதியை கூறி தகாத வார்த்தைகளால் திட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ‌கிராம நிர்வாக அலுவலகத்திற்கு, கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் நிலம் தொடர்பாக விசாரிக்க சென்றுள்ளார். அப்போது சரியான ஆவணங்களை தருமாறு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கிராம நிர்வாக அலுவலரை கோபால்சாமி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இடையில் குறுக்கிட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துச்சாமி, கோபால்சாமியை இடைமறித்து வெளியேறுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபப்பட்ட கோபால்சாமி, பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துசாமியை சாதிப்பெயரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.
தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய் குற்றச்சாட்டு கூறி வேலையை விட்டு நீக்கி விடுவதாக கோபால்சாமி மிரட்டியதாகவும், இதனால் முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு பகுதி வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது விசாரணை அறிக்கையை ஆட்சியருக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், கோபால்சாமியை, முத்துச்சாமி தாக்கியதற்கான எந்த நேரடி சாட்சியமும் இல்லை எனவும், அதேவேளையில், முத்துசாமியை காலில் விழ கூறியது உறுதியாகியிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.