தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் தமிழக அமைச்சர்கள் குழு!

webteam

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுக்க, அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

மேலும், சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் நேற்று பேரணியில் ஈடுபட்டனர்

இதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழுவினர், பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.