தமிழ்நாடு

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பாதிப்பு: சிஐடியு சவுந்தரராஜன்

kaleelrahman

ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் 6வது மாநில மாநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்...

ஜவுளித் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைவு மற்றும் நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள சுணக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து தையல் கலைஞர்களையும் பாதித்துள்ளது. அரசு போதுமான பணம் ஒதுக்கீடு செய்யாததால் நலவாரியம் மூலம் அறிவித்துள்ள சலுகைகள் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.

தையல் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ₹. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து முறைசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. விசைத்தறி, பனியன் மற்றும் நூல் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதனால் வேலையின்றி, வருமானமின்றி தையல் கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் துயரத்தில் உள்ளது. தமிழகத்தில் ஜவுளித் தொழிலை காப்பாற்ற நூல் மற்றும் பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பெண்கள் ஓரிடத்தில் மொத்தமாக பணியாற்றும் தனியார் ஆலைகளில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இயங்கும் 91 கூட்டுறவு சொசைட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை உள்ளிட்டவைகளை தைத்து வழங்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சொசைட்டிகள் ஜனநாயக பூர்வமாக நடக்க வேண்டும். இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்தார்.