தமிழ்நாடு

“புயலால் படகுகள் சேதமடைந்தால் உடனடி நிவாரண உதவி” - அமைச்சர் ஜெயக்குமார்

“புயலால் படகுகள் சேதமடைந்தால் உடனடி நிவாரண உதவி” - அமைச்சர் ஜெயக்குமார்

webteam

புயலால் படகுகள் சேதமடைந்தால் உடனடி நிவாரண உதவி வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “143 படகுகளில் மீன்பிடிக்க சென்ற சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று இரவு கரை திரும்புவர். தாழ்வான பகுதிகளில் நீரில் மக்கள் சிக்கினால் மீட்பதற்கு மீன்பிடி படகுகளுடன் மீனவர்கள் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் (நவ.25) பிற்பகல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் பகுதிக்கு இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  “வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 25 பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். சென்னையில் 24, 25 ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.

ஒரு சில இடங்களில் அதிகன மழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25 ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.