விதிமீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக, நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2007 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த இரண்டு அரசாணைகளை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, 1999 ஆம் ஆண்டு வரைமுறைப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் அதனை, அமல்படுத்தாததால் ஏராளமான விதிமீறல் கட்டிடங்கள் முளைத்து விட்டதாக வாதிட்டார்.
அத்துடன் விதிமீறல் கட்டடங்களை தொடர்ச்சியாக வரைமுறை செய்வது விதிமீறல்களை ஊக்குவிக்கும் என்றார். எனவே விதிமீறல் கட்டடங்களை வரைமுறை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 23க்கு ஒத்தி வைத்தது. அதுவரை விதிமீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்த விண்ணப்பங்களை பெறலாம் எனவும், ஆனால் நீதிமன்ற அனுமதியின்றி அந்த விண்ணப்பங்களில் எந்த முடிவும் அரசு எடுக்க கூடாது என்றும் தமிழக அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.