சென்னை ஐஐடி 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம்' மனித மூளையின் மர்மங்களை உயிரணு மட்டத்தில் வரைபடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய மரபியல் மற்றும் வாழ்வியல் முறைக்கு ஏற்ப உருவாக்கப்படும் இந்த வரைபடம், நரம்பியல் நோய்களைப் புரிந்துகொள்வதற்கும், துல்லியமான மருத்துவ சிகிச்சை முறைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
மனித உடலின் மிகவும் சிக்கலான உறுப்பான மூளையை, உயிரணு மட்டத்தில் வரைபடமாக்கும் பிரம்மாண்ட முயற்சியில் சென்னை ஐஐடியின் 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம்' இறங்கியுள்ளது. சுமார் எட்டாயிரத்து 600 கோடி நரம்பு செல்களைக் கொண்ட மனித மூளையின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, மேம்பட்ட இமேஜிங் மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதுவரை மேற்கத்திய நாடுகளின் தரவுகளைக் கொண்டே மூளை வரைபடங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக இந்தியர்களின் மரபியல் மற்றும் வாழ்வியல் முறைக்கு ஏற்ப இந்த வரைபடம் உருவாக்கப்படுகிறது. கருவில் இருக்கும் குழந்தை முதல் முதியவர்கள் வரை, மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மூளை எவ்வாறு மாறுகிறது என்பதை இது விளக்கும்.
குறிப்பாக, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்கள் மூளையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு உதவும். உலகளாவிய நரம்பியல் அறிவியலில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் துல்லியமான மருத்துவ சிகிச்சை முறைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.