தமிழ்நாடு

புயல் கரையை கடந்தாலும் வெளியே வரவேண்டாம் - ஐ.ஜி ஜெயராம்

Sinekadhara

புயல் கரையை கடந்தாலும் வெளியே வரவேண்டாம் என மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், புயல் கரையை கடந்தாலும் மக்கள் உடனே வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது; அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 8,500 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வருவாய், தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல்ப்படை வீரர்கள் அடங்கிய 400 பேர் மீட்புப் பணியில் உள்ளதாகவும், இவர்கள் தவிர, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 பேரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் மேலும் 6 மணி நேரத்திற்கு அதன் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.