தமிழ்நாடு

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அட்டூழியம் தலைதூக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

kaleelrahman

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அராஜகம், அட்டூழியம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா ஒத்தக்கடை, எரிச்சி ஆகிய பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி விட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது...

“தமிழகத்தில் இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை களப்பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை முன் களப்பணியாளர் என்கின்ற அடிப்படையில் நானே எடுத்துக் கொண்டுள்ளேன். இதுவரை தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இனிமேலும் கொரோனா தடுப்பூசி போடுவதில் எந்தவித தயக்கமும், அச்சமும் தேவையில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ வல்லுனர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் விரைவில் அனுமதி வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அராஜகம், அட்டூழியம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி தலைதூக்கும்” என்றார்.