நான் நினைத்தால் நாளைக்கே சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,666 மையங்களில் 1,71,604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு முகாமை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். இதையடுத்து திருவக்கரை பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் பழமை வாய்ந்த தொன்மையான கல்மர படிகங்களை பாதுகாக்கும் வகையில் 123 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புவியியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் பூமி பூஜையை அமைச்சர் சிவி சண்முகம் துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சசிகலா இன்று டிஸ்சார்ஜ் ஆகி வெளி வரும் நிலையில் விழுப்புரத்தில் முன்னாள் கவுன்சிலர் ரகுபதி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா என போஸ்டர் அடித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு,
“போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா! நான் நினைத்தால் நாளைக்கே சசிகலா ஒழிக என ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவார்கள்” என்றார். மேலும், “ 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் காலவரையறை கெடு கொடுத்துள்ளதால், 7 பேர் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க ஆளுநரை முதலமைச்சர் நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்” என்றார்.