சசிகலாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திமுக நிர்வாகி குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கைக்கு வலியுறுத்துவோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நயினார் குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, கடந்த 4 ஆண்டுகளாக அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இதனையடுத்து சசிகலா என்ற அந்த பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதில் குற்றம்சாட்டப்படும் ஒருவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி என்று தெரிகிறது. இதனால், இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பேசு பொருளானாது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் "செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக எம்பி செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டரில், “நைனார்குப்பம் #சசிகலா தற்கொலையில் சந்தேகம் மற்றும் மிரட்டபட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை(எங்கள் கட்சியை சார்ந்தவராகஇருந்தாலும்) கண்டறிந்து உரிய தண்டனை வழங்கபட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.