தமிழ்நாடு

’நம்மூர் இட்லி முதல் இத்தாலி நாட்டு உணவு வரை 47 வகைகள்’-உணவிலும் அசத்தும் செஸ் ஒலிம்பியாட்

webteam

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்க வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு நம்மூர் இட்லி முதல் இத்தாலி நாட்டு உணவு வரை 47 வகையான உணவுவகைகளுடன் விருந்தளிக்கப்படுகிறது. இவர்களுக்கான உணவின் தரம் கறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

தமிழரின் தனித்த பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. செஸ் ஒலிம்பியாட்டுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்போர், விருந்தினர்களுக்கான விருந்தாம்பலிலும் கவனம் செலுத்தப்படுகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. வடஇந்திய, தென்இந்திய, உணவு வகைகளுடன், இத்தாலி, மெக்சிகன், பர்மிய உணவுகள் என 47 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.

நாள்தோறும் வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை உணவும் உணவு பாதுகாப்பு துறையினரால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டபின் வழங்கப்பட உள்ளது. இதற்காக 256 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சுகாதார உணவு பாதுகாப்பு மையம் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் வீரர்கள் வெளியில் சென்று உணவு உட்கொள்ளும் வகையில் 51 விடுதிகளுக்கு உயர் தர உணவு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.