தமிழ்நாடு

கல்வி குறித்து பேசிய சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு - கமல்ஹாசன்

webteam

சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். 

இந்நிலையில் சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,

''ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய  கல்விக் குறித்த தம்பி சூர்யாவில் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற  ''வரைவு அறிக்கை’’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு'' என தெரிவித்துள்ளார்