டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா வழக்கில் இறுதிவரை போராடி நியாயம் பெறுவேன் அவரது தந்தை ரவி தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா வழக்கை விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துதான் உயிரிழந்ததாகவும், இதில் யாருக்கும் தொடர்பில்லை என்றும் கூறியிருந்தனர். மேலும், இந்த வழக்கில் யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது என்று கூறி சி.பி.ஐ. போலீசார், வழக்கை கைவிட முடிவு செய்துள்ளதாகவும், இதனால் வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு ஆட்சேபணை இருந்தால் நீதிமன்றத்தில் தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி விளக்கமளித்தார். அதில் தனது மகள் மரணத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடப்போவதாகத் தெரிவித்தார். மேலும், மகளின் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்த வேண்டும் என ரவி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.