தமிழ்நாடு

”என் மீது பாஜக சுமத்திய குற்றசாட்டுகளை நான் மறுக்கிறேன்”: நோட்டீஸுக்கு உதயநிதி பதில்

webteam

பாஜக புகார் அளித்ததின் பேரில் தேர்தல் ஆணையம் அளித்த நோட்டிஸுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர்களின் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று மாலை 5 மணிகுள் விளக்கமளிக்கும்படி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அந்த நோட்டிஸுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதில் கடிதத்தில், “கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை உள்ளிட்ட பல விஷயங்களை அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பாரதிய ஜனதாவின் புகார் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், கடந்த மாதம் 31ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் இருவரும் உயிரிழந்ததாக பேசியதாக கூறப்பட்டுள்ளது. இது தனிமனித விமர்சனம் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே தன்னுடைய பேச்சு குறித்து இன்று மாலைக்குள் விளக்கமளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்குநோட்டீஸ் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அவ்வாறு செய்யத் தவறினால் அவரை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.