தமிழ்நாடு

வெப்கேமரா சிக்னலை வைத்தெல்லாம் நான் இருக்கும் கைலாசாவை கண்டுபிடிக்க முடியாது - நித்யானந்தா

வெப்கேமரா சிக்னலை வைத்தெல்லாம் நான் இருக்கும் கைலாசாவை கண்டுபிடிக்க முடியாது - நித்யானந்தா

kaleelrahman

வெப்கேமரா சிக்னலை வைத்தெல்லாம் நான் இருக்கும் கைலாசாவை கண்டுபிடிக்க முடியாது என நித்யானந்தா தெரிவித்துள்ளார். 

நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் சமூக வலைதளங்களில் நேரலை மூலமாக புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா. இந்நிலையில் கைலாசா நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பாக, கைலாசா நாட்டிற்கான நாணயங்கள் மற்றும் பணத்தை விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று வெளியிட்டார்.

இதனையடுத்து கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதிகோரி மதுரை டெம்பிள்சிட்டி ஹோட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கிய 3மணி நேரத்தில் நேரலையில் தோன்றிய நித்யானந்தா மதுரை ஹோட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சியை சேர்ந்த சாரதாஸ் ஜவுளிகடை அதிபர் ஆகியோர் தங்களது தொழில்களை கைலாசாவில் தொடங்க முன்னுரிமை அளிக்க சன்னியாசிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


தனது நாட்டு பொருளாதார வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், தான் இறந்தபிறகு தனது சொத்தை மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அளிக்க உயில் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். சொத்துக்கு ஆசைபட்டு நான் மதுரை ஆதினத்திற்கு வரவில்லை எனவும் மீனாட்சியம்மன் வாழ்ந்த மதுரையில் உயிரிழக்க வேண்டும் என்பதால் தான் வந்தேன் எனவும் குறிப்பிட்டார். மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்காரர்கள் நான் உயிரோடு இருக்க வேண்டும் என பிராத்தனை செய்துவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் “நான் திருவண்ணாமலை மலைஅடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா வைத்து தரிசனம் செய்து வருகிறேன். ஆனால் சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசாவை கண்டுபிடிக்கலாம் என முயற்சிக்க வேண்டாம். அப்படி கண்டுபிடிக்க இயலாது. நான் உயிரிழந்த பின் தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சியம்மன் கோவிலையும் சுற்றிகொண்டுவந்த பின்னரே புதைக்க வேண்டும். கைலாசா நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் நிச்சயமாக தொழில் துவங்க வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.


இந்திய பிரஜை ஒருவர் தனி நாடு அறிவித்து நாணயங்கள் மற்றும் பொருளாதார அறிவிப்பை வெளியிட்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவரும் நிலையில் தினசரி நேரலையில் தோன்றும் நிலையில் கூட இந்திய அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.