தமிழ்நாடு

சாதிமறுப்பு திருமணம் செய்த பெண் வீட்டுக்குள் சிறைவைப்பு: கணவர் ஆட்சியரிடம் மனு

Rasus

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை மீட்டு தருமாறு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

நெல்லை மாவட்டம் காரியாணியை சேர்ந்தவர் சுனில்கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள மாற்று வகுப்பை சேர்ந்த பொன்சினேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் வேலை வாய்ப்பு கிடைத்தவுடன் இருவீட்டாரிடமும் தெரிவித்து சம்மதம் பெறலாம் என்று இருந்திருக்கிறார்கள்.

அதற்குள் பொன்சினேகா வீட்டிற்கு விவரம் தெரிய வரவே அவர் வீட்டில் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொன்சினேகாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சுனில்கண்ணன் சென்ற போது பொன்சினேகாவின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து நான்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை என சுனில்கண்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.