ஹரிதாஸ் & லதா
ஹரிதாஸ் & லதா புதியதலைமுறை
தமிழ்நாடு

குமரி | குடித்துவிட்டு தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி; சிகிச்சை பலனின்றி கணவன் மரணம்!

யுவபுருஷ்

செய்தியாளர் - சுமன்

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே உள்ள வண்டவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (58) - லதா (48) தம்பதி. இத்தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஹரிதாஸ், வழக்கம்போல் மனைவியை பார்த்து தகாத வார்த்தையை பேசி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த மனைவி லதா, வெந்நீரை எடுத்து கணவன் மீது ஊற்றியுள்ளார். அப்போது, ஹரிதாஸின் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் வெந்நீர் பட்டதில் அவர் வலியால் துடித்துள்ளார். அலறிய சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வந்து உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ஹரிதாஸ். கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த ஹரிதாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதற்கிடையே, வெந்நீரை ஊற்றிய அவரது மனைவியை தக்கலை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்