உயிரிழந்த சியாமளா தேவி - சுரேஷ்
உயிரிழந்த சியாமளா தேவி - சுரேஷ்  PT WEB
தமிழ்நாடு

சென்னை: மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்; தூங்கி எழுந்ததும் தாயை பார்த்து அழுத மகன்கள்!

விமல் ராஜ்

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவருடைய மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாகக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகைக் கடையை மூடியுள்ளார்.

இந்தநிலையில், குடும்ப செலவுக்காக அவரது மனைவி சியாமளா தேவி வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். இதனால் சியாமளா மீது சந்தேகப்பட்ட சுரேஷ் அடிக்கடி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்று வழக்கம் போல் சுரேஷ்க்கும் அவரது மனைவி சியாமளாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ், சியாமளா தேவியைக் காய்கறியை வெட்டும் கத்தியை வைத்து கொலை செய்துள்ளார். துக்கம் தாங்க முடியாமல் சியாமளா தேவியின் உடல் அருகே அமர்ந்து கதறியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நீண்ட நேரம் கழித்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சியாமளாவின் மகன்கள் எழுந்து சென்று பார்த்துள்ளனர். அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த சியாமளாவின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சியாமளா தேவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.