தமிழ்நாடு

நாமக்கல்: திருமணமான 23 நாட்களில் புதுப்பெண் தற்கொலை - கணவர் கைது

webteam

திருமணம் நடைபெற்ற 23 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் வசுமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வசுமதி மற்றும் நள்ளிபாளையத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றுள்ளது. வசுமதி BE பட்டதாரி என்பதால் எந்தவித வரதட்சணையும் வேண்டாம் எனக் கூறி வினோத் குடும்பத்தினர் திருமணம் செய்துள்ளனர். ஆனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றபோது அங்கு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் வசுமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வினோத் மற்றும் குடும்பத்தையும் கைது செய்யும் வரை வசுமதியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மல்லசமுத்திரம் பகுதியில் தங்கி இருந்த வினோத்தை திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர் பிடித்து காவல்துறை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் விசாரணை நடத்தி, சேலம் மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளானர். இதனையடுத்து வசுமதியின் பெற்றோர் அவரது உடலை வாங்கி தகனம் செய்தனர். திருமணம் நடந்து 23 நாட்களில் புது மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.