தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஒரே நாளில் பதவியேற்ற கணவன் – மனைவி!

Veeramani

சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவனும் மனைவியும் ஒரே நாளில், ஒன்றாக  நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்

நேற்று புதிதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற 10 பேரில், நீதிபதி முரளி சங்கர் குப்புராஜு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோர் கணவன் மனைவி என்பது ஆச்சர்யமான தகவல். புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுக்கு வரவேற்புரை வழங்கிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி தம்பதியினர் நீதிபதிகளாக பதவியேற்பது இதுவே முதல் முறை என்று கூறினார்.

திருச்சியில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த முரளி சங்கர் குப்புராஜு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பதிவாளராக (நீதித்துறை) பணியாற்றிவந்த தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகிய இருவருக்கும் 1996 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு பஞ்சாப்,ஹரியானா நீதிமன்றத்தில் நீதிபதி விவேக் புரி மற்றும் நீதிபதி அர்ச்சனா புரி ஆகிய கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் நீதிபதிகளாக பதவியேற்றனர். அதுபோல 2009ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.பதக் மற்றும் நீதிபதி இண்டர்மீட் கவுர் ஆகிய கணவன் மனைவி இருவரும் ஒரேநாளில் ஒன்றாக நீதிபதிகளாக பதவியேற்றனர்.