தமிழ்நாடு

"மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது மனிதத்தன்மையற்றது" - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

webteam

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்தார்.

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இத்தகைய வழக்குகள் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு “இத்தகைய உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல்.

கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதையும் மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடர்கிறதா? இல்லையா என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்” எனக்கூறி அடுத்த வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.