தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு காய்கறி சந்தையில் அருகம்புல், பூக்கள் அமோக விற்பனை!

நிவேதா ஜெகராஜா

விநாயகர்சதுர்த்தி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி, பழங்களின் விலையில் பெரிய மாற்றம் இல்லாதநிலையில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதில் கரும்பு வாழைக்கன்று, விளாம்பழம், அருகம்புல், எருக்கம்பூ, கம்பு, சோளம், மாவிலை தோரணங்கள், மலர் மற்றும் பழ வகைகள் விற்பனை வேகமெடுத்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள் வரத்து போதுமான அளவில் இருப்பதால் விலையேற்றம் பெரிய அளவில் இல்லை. அதேநேரம் பூக்கள் விலை மட்டும் உயர்ந்துள்ளது.

இதற்கிடையே பண்டிகையொட்டி திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை, கனகாம்பரம் பூக்கள் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கிலோ முல்லை பூ ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.