போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தப்படி 2.44 காரணி ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் அவர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதிய ஒப்பந்தம்படி குறைந்தபட்சமாக 2,648 ரூபாயும், அதிகபட்சமாக 11,321 ரூபாயும் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். 2013லிருந்து 2016ஆம் ஆண்டு வரை பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு 3 சதவிகிதம் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இனி புதிதாக பணியில் சேரும் ஓட்டுநர்களுக்கு 17,700 ரூபாயும், நடத்துநர்களுக்கு 17,500 ரூபாயும் தொழில்நுட்ப மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு 18,000ரூபாயும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் பணிப்புரிந்த ஓட்டுநருக்கு அடிப்படை ஊதியம் 5,200 ரூபாய் 3 ஆண்டுகளுக்கு 3 சதவிகிதம் உயரும். மேலும் 6வருடங்கள் பணி நிறைவு செய்திருந்தால் கூடுதலாக 5 சதவிகிதம் வழங்கப்படும். அதனடிப்படையில், 10ஆண்டுகள் பணியாற்றிய ஓட்டுநருக்கு அடிப்படை ஊதியம் 8,245 ரூபாயாக உயரும். 1700 ரூபாய் என வழங்கப்படும் தர ஊதியம் 6 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் 200 உயரும்.
போக்குவரத்துறையில் 10ஆண்டுகள் பணியாற்றிய ஓட்டுநருக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்துடன் 2.44 காரணியால் பெருக்கி ரூ.24,753.80 காசுகள் ஊதியமாக வழங்கப்படும். அதனுடன் வீட்டுவாடகை படி சென்னையில் வசித்தால் 3,000 பிற மாநகராட்சிக்கு ரூ.1,800 நகருக்கு வெளியே இருப்பவர்களுக்கு ரூ.1.000, 2ஆம் நிலை நகருக்கு 1000, கிராமத்திற்கு 400ரூபாயும் வழங்கப்படுகிறது. அதனுடன் நகர ஈட்டுபடியாக 600 ரூபாயும் வழங்கப்படும். நடத்துநர், தொழில்நுட்ப, இளநிலை உதவியாளர்களுக்கும் இதே நிலையே பின்பற்றப்படும்.