தமிழ்நாடு

தி.மலை: கீழே கிடந்த ரூ.10,000-ஐ காவலர்களிடம் ஒப்படைத்த ஓட்டல் ஊழியருக்கு பாராட்டு!

Sinekadhara

திருவண்ணாமலையில் திருவிழாவில் கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டல் சர்வரை பாராட்டி டிஎஸ்பி சன்மானம் வழங்கினார். 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ராமு. வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி வேலூரில் பிரபலமான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது யாரோ ஒரு நபர் வேலூர் சிஎம்சி கண்மருத்துவமனை அருகே 10 ஆயிரம் ரூபாயை விட்டுசென்றுள்ளார். அவ்வழியாக சென்ற ராமு, கீழே கிடந்த 100 ரூபாய் தாள்கள் அடங்கிய 10 ஆயிரம் ரூபாயை வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, ராமுவின் இந்த நேர்மையை பாராட்டும் விதமாக வேலூர் பொறுப்பு டிஎஸ்பி மகேஷ், அவரை நேரில் அழைத்து பாராட்டி 500 ரூபாய் சன்மானம் வழங்கியுள்ளார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் பணம் யாருடையது என இதுவரை தெரியாததால், பணத்தை தவறவிட்டவர்கள் உரிய ஆவணத்தோடு தெற்கு காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ளும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.