death
death file
தமிழ்நாடு

ஓசூர்: சாஃப்ட்வேர் இன்ஜினியர் மனைவியுடன் விபரீத முடிவு – போலீஸார் விசாரணை

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாஃப்ட்வேர் இன்ஜினியர் தனது மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police station

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹச்.எம்.டி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் வம்ஷிதர் பசுபிலடி (50) இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி தீனாவம்சி (45). இவர்கள் இருவரும் ஓசூர் அருகே உள்ள தளியில் ஜெபராணி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை, வம்ஷிதர் தற்போது ஒரு எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இவர்களது வீடு உள் தாழ்ப்பாளிட்டு பூட்டப்பட்டு கிடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மாலை வீட்டின் ஜன்னல் வழியாகவும் மெயில் வாசல் கதவு வழியாகவும் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஜெபராணி தளி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தளி போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

தற்கொலை - மாதிரிப் படம்

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குள்ளேயே உடல்கள் கிடந்ததால் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியதும் தெரியவந்தது. இதனையடுத்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.