தமிழ்நாடு

ஓசூர்: பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

webteam

பஞ்சாயத்து தலைவரை கட்டையால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே பிபி பாளையம் செல்லும் வழியில் ஒருவர் இறந்து கிடப்பதாக தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்துள்ள நிலையில், 100மீட்டர் தொலைவில் தலையில் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்தவர் பிபி பாளையம் மதனகிரியப்பா மகன் நரசிம்மூர்த்தி (42) என்பதும், இவர் தளி ஒன்றியம் தாரவேந்திரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரேதத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.