நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறையில் இருந்தவாறே வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரை பதவி ஏற்க அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அவருடைய மனைவி மனு அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணன் (37). இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். கிருஷ்ணனின் தந்தை சிவலிங்கம் பல வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் சாராய வியாபாரம் செய்து வந்தார். பிறகு தன்னுடைய மகன் கிருஷ்ணனுடைய பிள்ளைகள் எதிர்காலம் கருதி அந்த தொழிலை கைவிட்டு இறந்துபோனார். அதனைத்தொடர்ந்து சிவலிங்கத்தின் மகன் கிருஷ்ணனை சாராய வியாபாரம் செய்வதாகக்கூறி காவல்துறை அடிக்கடி வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 9வது வார்டு உறுப்பினர் வேட்பாளராக சீப்பு சின்னத்தில் நின்று வாக்கு சேகரித்து வந்த நிலையில், தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கிருஷ்ணனை சாராய வியாபாரம் செய்வதாகக் கூறி காவல்துறையினர் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். கிருஷ்ணன் சிறைக்கு சென்றாலும் அப்பகுதியில் வார்டு உறுப்பினருக்கு மொத்தமுள்ள 506 வாக்குகளில் 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வரும் 20ஆம் தேதி பதவி ஏற்க வேண்டும் என்கிற நிலையில் கிருஷ்ணன் இன்னும் சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் வெற்றி பெற்ற தனது கணவரை பதவி ஏற்க அனுமதிக்குமாறு கிருஷ்ணனின் மனைவி, தனது பிள்ளைகள் மற்றும் பெரியப்பா உடன் வந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹாவிடம் மனு அளித்துவிட்டுச் சென்றார்.