தமிழ்நாடு

அதிக போதை தரும்: மதுவுடன் அட்ரோபின் மாத்திரையை கலந்து விற்பனை – உயிருக்கு ஆபத்து

webteam

ராமேஸ்வரத்தில் மது பாட்டிலில் போதை தரக்கூடிய மாத்திரையை கலந்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வேர்க்கோடு அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவர், டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதில் அட்ரோபின் எனப்படும் அதிக போதை தரக்கூடிய மாத்திரையை கலந்து அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக துறைமுக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குமரகுரு மது பாட்டிலில் அதிக போதை தரக்கூடிய அட்ரோபின் மாத்திரையை கலந்து விற்பனையில் ஈடுபட்டபோது போலீசார் கையும் களமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அட்ரோபின் மாத்திரைகள் ஒற்றைத் தலைவலி, இதயத்துடிப்பு அதிகரிக்க செய்வதோடு அறுவை சிகிச்சையின் போது இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாகவும் இதில் எந்த போதையும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். இதை மதுவில் கலந்து கொடுத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.