admk
admk pt web
தமிழ்நாடு

பிரம்மாண்ட டிஜிட்டல் திரை முதல் 1.25 லட்சம் நாற்காலிகள் வரை... மதுரை அதிமுக மாநாட்டின் சிறப்புகள்!

Angeshwar G

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. ‘அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளாக மேடை அமைப்பது, பந்தல் அமைப்பது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘அதிமுக பிளவுபட்டுள்ளதால் தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகளவில் இல்லை. அவர் தலைமையிலான அதிமுகவிற்கு தென்தமிழகத்தில் பலம் குறைவு’ என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

இவை அனைத்தையும் சரிகட்டும் விதமாகவும் தென்தமிழ்நாட்டில் தனக்கு இருக்கும் பலத்தை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கும் விதமாகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றே கூறப்பட்டது. அண்மையில் திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய மாநாடு பெரிதளவில் பேசப்பட்டதால் அதைவிட பிரம்மாண்டமாக மாநாடு நடத்த வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருக்கலாமென்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரை போடப்பட்டு, 1.25 லட்சம் நாற்காலிகள் வரை போடப்பட்டு மிகப்பெரிய அளவில் மாநாடு தயாராகி வருகிறது. மதுரையில் நடைபெறும் இந்த அதிமுக மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன என்பதை தொகுப்பாக இங்கே காணலாம்:

01. நிகழ்ச்சிகளை தொலைவிலிருந்து காணும் வகையில் மேடையில் பிரமாண்டமான 'டிஜிட்டல்' திரை

02. மாநாடு வளாகத்தில் தொண்டர்கள் அமர 1.25 லட்சம் நாற்காலிகள்

03. காலை 7:00 முதல் இரவு 7:00 வரை உணவு வழங்க ஏற்பாடு.

04. காலையில் இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார்; மதியம் 'வெஜிடபிள்' பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், காய்கறிக் கூட்டு, பொரியல், அப்பளம்.

05. உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10,000 பேர்.

06. மூன்று இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும், அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் ஏற்பாடு.

07. மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள்

08. நகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு.

09. மாநாட்டுக்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்கு வர வழி

10. 15க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு ஒதுக்கீடு

11. குடிநீர் வழங்க 300 மி.லி. அளவு கொண்ட 10 லட்சம் குடிநீர் பாட்டில்களுக்கு ஏற்பாடு (இதற்கான 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது)

12. ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தவும், சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு

13. பந்தல் அருகே 150 மொபைல் கழிப்பறைகள் (தற்காலிக கழிப்பறைகள்) அமைக்கப்பட உள்ளன.

14. மாநாட்டை காலை 8:00 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்க உள்ளார். அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர்.

15. காலையிலிருந்து மாலை வரை கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

16. மாலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரை

17. மாநாட்டையொட்டி புகைப்படக் கண்காட்சி நடக்க உள்ளது.

18. கண்காட்சியில் கட்சியின் வரலாறு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.

19. மாநாட்டுக்கு வரும்படி மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10,000 குடும்பங்களுக்கு 'வீடுதோறும் இலை' என்ற தலைப்பின் கீழ் மரக்கன்றுடன் மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்க கட்சியினர் முடிவு

20. ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடி பழனிசாமி கௌரவிக்க உள்ளார்.