தமிழ்நாடு

ஹெல்மெட் வழக்கு - அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 

ஹெல்மெட் வழக்கு - அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 

webteam

ஹெல்மெட் விவகாரத்தில் முறையாக தகவல் தராத உயரதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அம்ல்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

தமிழகத்தில் 2007 ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாய ஹெல்மெட் சட்டத்தை ஓராண்டுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்த போதும், அதை அமல்படுத்த 12 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்த  உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டிய நீதிபதிகள், ஹெல்மெட் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை ஏன் அமல்படுத்தவில்லை என்பது குறித்து உள்துறை செயலாளரும், எத்தனை ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் குறித்த மருத்துவ அறிக்கையை  தாக்கல் செய்யாதது ஏன்  என சுகாதார துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மாவட்ட வாரியாக, ஹெல்மெட் அணியாதவர்கள்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், பலியானவர்களின் விவரங்களையும் சமர்ப்பிக்க தமிழக  டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஹெல்மெட் வழக்கு தொடர்பான இந்த விவரங்களை வழங்காவிட்டால்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள்,  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தவிர்க்க இந்த உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி,  விசாரணையை செப்டம்பர் 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.