சென்னை உயர் நீதிமன்றம் pt desk
தமிழ்நாடு

மாவட்ட நீதிபதிக்கு வழங்கிய கட்டாய ஓய்வை உறுதி செய்த உயர் நீதிமன்றம் - பின்னணி என்ன?

மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்து உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கடந்த 2018ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.குணசேகர், சில குற்றச்சாட்டுக்கள் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதே நாளில் விருப்ப ஓய்வு கேட்டு குணசேகர் அளித்த விண்ணப்பத்தை, அதே ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

court order

அவருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் 58 வயதை பூர்த்தி செய்ததால், 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது. இந்த முடிவுக்கு உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கொண்ட குழு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மாவட்ட நீதிபதி குணசேகருக்கு கட்டாய ஓய்வு அளித்து தமிழக அரசு 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி குணசேகர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்தில் இருந்து இல்லாமல் அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை எனவும், குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற சுற்றறிக்கை, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளது.

Madras High Court

எனவே தனக்கு கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி குணசேகர் வாதிட்டார். நீதிமன்ற ஊழியர்களை மோசமாக நடத்தியது, மனைவி, 25 அசையா சொத்துக்கள் வாங்கியது, பி.எம்.டபிள்யூ சொகுசு கார் வாங்கிய விவரங்களை குணசேகர் உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. அவரது சம்பளக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பெருந்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. பொது நலனை கருதி, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதித்துறை அதிகாரியான மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரியை, அரசு ஊழியர்களைப் போல கருத முடியாது. நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையை கொண்டிருக்க வேண்டும். அதனால் உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.