தமிழ்நாடு

“திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை” - நீதிமன்றம்

webteam

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி தாயின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றிய திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.