தமிழ்நாடு

ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய முதியவர் கொலை - வாலிபருக்கு தண்டனை குறைப்பு

ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய முதியவர் கொலை - வாலிபருக்கு தண்டனை குறைப்பு

webteam

வேலை வாங்கி தருவதாக கூறி, ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய முதியவரை அடித்துக் கொன்ற வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கம்புலியான் பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி விஸ்வநாதன். இவர் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தனபால் என்ற இளைஞரை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்டவாறு வேலை வாங்கித்தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபால், விஸ்வநாதனை இரும்பு தடியால் அடித்து கொலை செய்துள்ளார். கடந்த 2014 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த ஈரோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம், தனபாலுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2016 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தனபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு, நேரடி சாட்சிகள் ஏதுமில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த வழக்கு நிரூபிக்க பட்டுள்ளதாக தெரிவித்தது. 

மேலும் தனக்கு வேலை வாங்கி தராத ஆத்திரத்தில் தனபால் தாக்கியுள்ளாரே தவிர, விஸ்வநாதனை கொலை செய்யும் நோக்கில் தாக்கவில்லை எனக்கூறி, அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை 8 ஆண்டுகளாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

தற்போது ஜாமீனில் உள்ள தனபால், மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கும் படி ஈரோடு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.