சுபஸ்ரீ வழக்கில் காவல் குறிப்பேட்டில் பேனர் குறித்து எழுத மறந்த காவல் ஆய்வாளரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை முன் வைத்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தாமாகவே முன் வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.
இதையடுத்து காவல்துறை ஆய்வாளரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை முன்வைத்தனர். அதாவது காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட இல்லை. ஏன் எழுதவில்லை என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காவல் ஆய்வாளர், விபத்து நடந்த் பகுதியில் 4 பேனர்கள் இருந்தன. குறிப்பேட்டில் எழுத மறந்து விட்டேன் எனத் தெரிவித்தார்.
பிற்பகல் 2.30 மணிக்கு நடந்த விபத்து குறித்து மாலை 6 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் 18 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஆய்வாளர் ஒரு பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் அனுமதி பெறாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? எனவும் கேள்வி எழுப்பினர்.