விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த விடியல் வீர பெருமாள், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை , மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மினரல் வாட்டர் கம்பெனிகள் அரசிடம் எவ்வித முறையான அனுமதியுமின்றி நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கின்றனர்.
சில நிறுவனங்கள் அனுமதி பெற்றதை விட கூடுதலாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சிறிய நீரோடைகள், விவசாய கிணறுகள் மற்றும் குளம் போன்றவற்றிலும் நிலத்தடி நீர் அடி ஆழத்திற்கு சென்று விட்டது. குடிநீருக்காக பொது மக்கள் அலையும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரிக்கும் கம்பெனிகள் சுயநலத்துடன், செயல்பட்டு வருகின்றன. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்தும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு, "நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன் மற்றும் நீர்வளத்தை காக்க நிலத்தடி நீர் சுரண்டப்படாமல் பாதுகாக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வணிகரீதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இதில் தோல்வியடைந்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் சட்டவிரோதமாக வணிகரீதியில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.