தமிழ்நாடு

எதிர்காலத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக்கூடிய இடங்களைக் கண்டறிக - நீதிமன்றம்

Sinekadhara

எதிர்காலத்தில் உயர் நீதிமன்ற பணியிடங்களை நிரப்பும்போது பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக்கூடிய இடங்களை கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர்களை அனுமதிக்காததால் மறு தேர்வு நடத்தக்கோரி கண்பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உதவியாளர்கள் இல்லாமல் தேர்வு எழுதக்கூடியவர் மட்டுமே தேர்வுற்கு விண்ணப்பிக்கலாம் எனற அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை எனவும், தேர்வு நடைமுறை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் நிவாரணம் அளிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நீதி பரிபாலனத்தில் ஈடுபட்டுள்ள உயர் நீதிமன்றம், விளிம்பு நிலை மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், தலைமை பதிவாளர் தரப்பு வழக்கறிஞரும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும் இணைந்து கண்டறிந்து உயர் நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.