தமிழ்நாடு

ஐங்கரன் காபி பெயரை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐங்கரன் காபி பெயரை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் சென்னை,கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீ மற்றும் காபி ஸ்டால் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் எங்களுக்கு சொந்தமாக 35 கடைகள் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது எங்களது வர்த்தக முத்திரை ஆகும். காப்புரிமை சட்டத்தின் கீழ் இதற்காக உரிமம் பெற்றுள்ளோம்.

இதன்படி, கும்பகோணம் ஐங்கரன் என்ற பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. ஆனால், ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோட்டில் தமிழ்செல்வி என்பவரும், தஞ்சாவூர் வடக்கு தெருவில் அகிலாண்டேசுவரி என்பவரும் உணவகம் நடத்தி வருகின்றனர். இது எங்களது வர்த்தக உரிமைக்கு எதிரானதாகும். எனவே, அவர்கள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோடு, வடக்கு தெரு ஆகியவற்றில் கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.