தமிழ்நாடு

சமஸ்கிருத குடமுழக்கு என குறிப்பிடும் போது தமிழ் மொழி மட்டும் ஏன்இல்லை?- நீதிமன்றம் கேள்வி

சமஸ்கிருத குடமுழக்கு என குறிப்பிடும் போது தமிழ் மொழி மட்டும் ஏன்இல்லை?- நீதிமன்றம் கேள்வி

webteam

அழைப்பிதழில் சமஸ்கிருதத்தில் ஓதுவோரை குறிப்பிடும் போது, தமிழ் மொழியில் திருமறைகளை ஓதுவோர் ஏன் குறிப்பிடப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பொறுப்பில் உள்ளேன். கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. 900 ஆண்டுகள் பழமையானது. கொங்கு மண்டலத்தின் பெருமையாக திகழும், இந்த கோவிலின் குடமுழுக்கு நிகழ்வானது டிசம்பர் 4ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சைவ முறைப்படி குடமுழுக்கின் போது, தேவார திருவாசகங்கள் ஓதப்பட வேண்டும். ஆனால் அது போல நடைபெறுவதாக அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே கரூர் மாவட்டம் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் சைவ ஆகம விதிப்படி தேவார திருவாசகங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில், 25 ஓதுவார்கள் உள்ளனர். ஆறுகால பூஜைகள் நடந்த பின்னரே குடமுழுக்கு நடைபெறும் ஆறுகால பூஜைகளும் தேவாரம் திருவாசகம் பாடப்படும். குடமுழுக்கின் போதும் தமிழ் திருமுறைகள் பாடப்படும்" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில்," குடமுழுக்கு அழைப்பிதழில் அது குறிப்பிடப்படவில்லை" என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள்," அழைப்பிதழில் சமஸ்கிருதத்தில் ஓதுவோரை குறிப்பிடும் போது, தமிழ் மொழியில் திருமறைகளை ஓதுவோர் ஏன் குறிப்பிடப்படவில்லை? என கேள்வி எழுப்பினர். அது போல குறிப்பிடப்பட்டிருந்தால், இது போல வழக்கு தொடரப்பட்டிருக்காது. தஞ்சை பெரிய கோவில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோவில் நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவோரை குறிப்பிடும் போது அதற்கு நிகராக தமிழ் திருமுறைகள் ஓதுவோரையும் குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோவில்களுக்கி அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் வேறு வழக்குகள் இது போல தாக்கலானால் 10 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளில் குடமுழுக்கை நடத்திக் கொள்ளலாம். அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மொழியிலும் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் " என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.