சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை தறவாக நடத்த முயன்ற வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு பலமுறை ஜாமீன் மறுக்கபட்ட நிலையில் மதுரை பெண்கள் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"இந்தச் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. அவர் யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. உயரதிகாரிகள் என்னும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை.
பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்க்கல்வித்துறை செயலர், உயர்க்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் எனக் கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவியை சந்திக்கவோம், அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, அவரை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.