செய்தியாளர்- M.மீரா
வருமானத்தை மறைத்ததாகவும், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகளை மேற்கொண்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், அமைச்சர் கே.என். நேருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.என். நேரு தரப்பில் ரூ.17 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பதாகவும், ரூ.11.98 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு உரிய கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு ஆவணங்களும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.
முன்னதாக, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் ஆவணங்களில் முதற்கட்டமாக விசாரிக்கத் தேவையான முகாந்திரம் இருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்க உத்தரவிட்டு, அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான கே.என். நேருவுக்கு எதிரான இந்த வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.