தமிழ்நாடு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துங்கள்: அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

kaleelrahman

மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை தட்டான்குளம் - மேலூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் உத்தரவிடக்கோரி தாஹா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள ‘5422‘ என்ற எண் கொண்ட கடை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கடை மாற்றப்பட்டது குறித்தும், தமிழகத்தில் எத்தனை மதுபானக் கடைகள் உள்ளன? அமைவிட ஆட்சேபனை தொடர்பாக வந்த புகார்கள், நிராகரிக்கப்பட்ட புகார்கள் எத்தனை? மாற்றி அமைக்கப்பட்ட கடைகள் எத்தனை? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அதன் விரிவான உத்தரவில், “பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புப் பகுதி அருகே வைப்பதற்கு மதுபானக் கடைகள் ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ இல்லை. மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது. இது குறித்து அரசு கவலை கொள்வதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்துகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்கான பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி செலவிடுகிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். இதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும்” எனவும் அரசுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

தொடர்ந்து, மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்பன உள்ளிட்ட பல நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்படும். ஆனால், நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.